சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
By முனைவர் மு பழனியப்பன்
காரைக்குடி கம்பன் கழகத்தின் அறுபத்தெட்டாம் ஆண்டுவிழா கம்பன் மணிமண்டபத்தில் 9-4.2006 அன்று மாலை முதல் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் , முனைவர் ஒளவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான் முதலியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவிற்குத் தலைமையேற்ற ஜெயகாந்தன் கவிஞர் சேதுபதியின் சீதாயணம் என்ற நெடுங்கவிதைத் தொகுப்பை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அவரின் உரையில் இடம் பெற்ற சிலபகுதிகள் பின்வருமாறு.
கடவுள் புகழ்பாட ஒருமைப்பாடு, சுய அன்பு மட்டுமே போதும். ஆனால் கம்பன் புகழ்பாட காலத்தின்மீது அன்பு வைத்திருக்க வேண்டும். மனிதர்க்கு மனிதர் மீது அன்பு இருப்பது இயல்பு. அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் கம்பன் கம்பராமாயணத்தைப் பாடினார் என்பது மனிதாபிமானிகளின் கருத்து. சத்திரிய தருமத்தை நனவாக்குவதற்குத்தான் இராமாயணம் என்றார் வால்மீகி. ஆனால் கம்பன்தான் அது மனிதனின் புகழ் பாடுவது என்றார். மனிதனே புகழுக்கு உரியவன். கடவுளும் வாழ வேண்டும் என விரும்புபவன். கடவுள் வாழ வேண்டுமெனில் அவர் மனித உருவில் தான் வ்ரவேண்டும் என கம்பராமாயணம் சொல்கிறது. ... சேதுபதியின் சீதாயணம் நூலைப் படித்துப் பார்த்தேன். கம்பனைப் படித்தால் கம்பன் மாதிரி எழுதவரும் என்பதற்கு இந்த நூல் ஒரு அத்தாட்சி. கம்பன் மாதிரி எழுத வேண்டும் இன்றைக்கு இருக்கிற புதிய விஷயங்களை எழுத வேண்டும், அந்தக் காரியத்தை சேதுபதி இங்கு நன்றாகச் செய்திருக்கிறார். என்றார்.
...........................................................................................................................................
சிதைந்த சித்திரங்கள் ----------------------- திரைப்பட வாய்ப்பு மறுக்கப்பட்டு ஊடக வாசல்கள் மூடப்பட்டு அலைகள் உரசும் கரையின் நடுவே பயணம் போனான் கம்பன் பசியோடு சுவடுகளின் உதிர்ந்த கவிதைச் சொற்களைக் கையகப்படுத்திய கடல் பையப் பையப் பாற்கடல் ஆயிற்று,,, வறண்ட காவிரி மனதைப் பிறாண்ட தொண்டை அடைத்தது கவிச்சக்கரவர்த்திக்கு. கொக்கக்கோலா விற்கும் சிறுவனுக்குக் கொடுக்கக் காசில்லை. சம்பந்தமில்லாமல் அரபு நாட்டிற்குப் பிழைக்கப்போன சடையப்பன் ஞாபகம் தொற்றிக் கொண்டது. குலோத்துங்கன் டெல்லிக்குப்போய் நான்கு நாளாச்சு அமெரிக்க அதிபர்க்குக் கொடை கொடுக்கப் போனவன்,,, மிச்சமிருக்கும் காவியச் சித்திரங்கள் கோடைவெயிலில் வியர்வைத் துளிகளாய் உதிரத் தொடங்கின,,, (தொடரும்) -சேதுபதி [ இது நெடுங்கவிதைகளின் தொகுப்பு நூல் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக