Kapilan Release

புதன், 22 ஆகஸ்ட், 2012

மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறு



பரமசிவம் முத்துசாமி

இரா.குறிஞ்சி வேந்தன்

        மானுடம் முழுவதையும் தம் பாட்டுத்திறத்தாலே கூட்டிவைத்த பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம்’ என்று குறிப்பிட்டு, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்றும் அருளாணை இட்டார். அம்மகாகவியின் கனவு இன்றைக்குக் கண்முன்னே நனவாகி வருகின்றது.

     வடவேங்கடம், தென்குமரி ஆகிய இடைப்பட்ட நானிலத்தில் தோன்றிய தமிழ் இன்று உலகத்தையே தன்வசப்படுத்தியிருக்கிறது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் செழித்தோங்கி உலகமுழுதாளுகின்றது.

    எங்கெல்லாம் தமிழர்கள் கால்பதித்தார்களோ, அங்கெல்லாம் தமிழும் தன்தடம்பதித்துக் கிளைத்து வளர்ந்திருக்கிறது. திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்ட தமிழர்களின் தோள்தழுவிச் சென்றது தமிழ்மொழி. தமிழியம் பரவிய உலகநாடுகளுள் குறிப்பிடத்தக்கது மலாயாபூமி. தாய்மண்ணை நேசிக்கும் எந்த மக்களும் தமிழர்களை விரும்புவர், காரணம் தமிழர்கள் எந்த மண்ணையும் தன் தாய்மண்ணாகக் கொண்டு போற்றுவர் என்பதே. 

    வரலாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது போல, தமிழகத் தமிழ், இந்தியத்தமிழ், அயலகத்தமிழ் வரலாறு என்பதான வரிசையில் ‘மலேசியப் பேச்சுத்தமிழ் வரலாறு’ ஒரு புதிய தடம்.

     தான் பெற்ற இன்பமாகிய தமிழ்மொழியின் மாண்பை எங்கே தன் சந்ததியினர் மறந்து விடுவாரோ என்று கவலை கொள்ளும் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் இந்நூல் அது நீக்கும் மருந்து. ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி ரப்பர்த் தோட்டங்களுக்குள் விளைந்த இத்தமிழை அழகுடை நூல் வடிவில் செதுக்கித் தந்திருக்கிறார்கள் பேராசியர்கள் முனைவர் பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகிய இருவரும். காலப்பெட்டகமாம் இந்நூலை வெளியிடுதற்கு இசைந்த அவர்களுக்கு நன்றி கூறி, பெருமையுடன் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

சனி, 16 ஜூன், 2012

மங்காவு - சிறுகதைகள் - சொ. அருணன்






அருணன்  ஒரு நல்ல துடிப்பான இளைஞன். மாணாக்கனாக, புத்தக வெளியீட்டாளனாக, கணினிக் கலைஞனாக, கோபக்கார அடுத்த தலைமுறைக்காரனாக வளர்ந்து வரும் ஆசிரியராகத் தெரியும்- எனக்கு ஒரு முழு ஐந்து ஆண்டுகளாக. அதற்கு முன்பே அவனுக்குத் தெரிந்தவர்கள் எனக்கும் தெரிந்தவர்களாக இருந்ததால் ஒரு தொந்த சொந்த பந்தம் உண்டாகி விட்டது. 
நான் வாசித்த ஜெயகாந்தன் படைப்புகள் அருணனுக்கு மனப்பாடம். நான் மதித்துப் படிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அணுக்கத்திலேயே இந்தப் பிள்ளை வளர்ந்திருக்கிறான். நான் பாரதியார் பாடலை முணுமுணுத்தால் இவன் அடுத்து வரும் வரிகளைச் சத்தமாக ஓதிச் செல்வான். 
அருணன் கவிதை எழுதிக் காட்டினான்; நமது பள்ளி நிகழ்வுகளில் திருக்குறள் சிறப்புரையாற்றினான்; எனது ஆய்வுக்கட்டுரைகளுக்கு நகலெடுத்துக் கொடுத்து உதவினான். சந்தடி சாக்கில் ஓரிரு தாள்களை இடையில் வைத்துப் படித்துப் பாருங்கள் என்றான். படித்துப் பார்த்தேன். கதைகள்.. ‘ம்... மேலும் எழுதிப் பாரேன். வாசிக்கலாம்’ என்று சொல்லி வாக்கியத் தொடரை முடிக்கும் முன்னரேயே ‘இதைப் பிடியுங்கள், படியுங்கள்’ என்று ஒரு கத்தைத் தாள்களை மேசைமீது அடுக்கி வைத்தான். 
அதிகமாகக் கட்டுரை, கவிதை வாசிக்கும் எனக்குக் கதைகளில் மனம் வைக்க நேரமாகும். ஒருவாரம் அருணனின் கதைத்தொகுதி முதல்பிரதி ஆரோவில் வீட்டு மேசையில் இருந்து என்னுடன் சிங்கப்பூர் செல்லும் பெட்டிக்குள் வாசம் செய்து திரும்பும்வழியில் சென்னை ஐப்பசி அடைமழையை அனுபவித்தபடி மீண்டும் நர்சரித் தோட்டத்திற்குள் நுழைந்தது. வாசித்தேன். முதல்முறை சாதாரணமாக வாசித்தேன். இரண்டாவது முறை இத்தொகுப்பிலுள்ள கதைகளைத் தனித்தனியே மூன்று வேளை உணவுபோல உட்கொண்டு இருந்தேன்.
அருணனின் கோவலன், இராமன், மணிமேகலை எல்லாம் நிழல்களாகவே வந்து போகிறார்கள். பாபுவும் பட்டினத்தாரும் மகாத்மா காந்தியும்அப்படியே. நாம் அவர்களாக இருந்தால் எப்படியெல்லாம் பேசியிருப்போமோ அப்படிப் பேசிப் பழக ஒரு நாடக மேடை போட்டு மனம் நடித்துப் போகிறது. ஒரு தேர்ந்த உளவியல் பேராசிரியர் இக்கதாபாத்திரங்களை நாடக பாணியில் ஆய்வுசெய்வது போல அகவய மதிப்பீடாக அமைந்துள்ளது. புதிய யுக்தி, புதிய கோணம் என்றாலும் ஒரே மாதிரியான வார்த்தை அடுக்கல்களால் படித்ததையே படிக்கிறோமோ என்றதொரு சிற்றலுப்பு சில இடங்களில் ஏற்படுகிறதுதான். சிறுகதை வாசிப்பைப் பொழுதுபோக்கு நேரக்கணக்கில் பங்கு வைக்கிறவர்களுக்கு அப்படித்தான் தோன்றும். 
எப்படியானாலும் இவை ஆழமானவை. வெளியேறும் பேச்சுகளை அடித்துச் செல்லும் வெள்ளமாக்கி விடாமல் சிறுகச்சிறுக அணைகட்டி மதகுகள் வழியே பயனுற வெளியேற்றும் தேர்ந்த உத்தியாகவும் எனக்குத் தோன்றுகிறது.
இத்தொகுப்பினுள் என் நெஞ்சம் தொட்டவை நடிப்பும், மொந்தன் வாழையும். நம் ஊரில் நம்முடன் வாழும் சக மனிதர்களின் அன்றாடப் பங்களிப்புகளில் சிறிது கிள்ளி எடுத்துப் பதியம் போட்டமாதிரியே உள்ளவை அவ்விரண்டு கதைகளும். நம்முடன் நெருங்கி வருகின்றனர் மொந்தன் வாழைக் குழந்தைகளும், பரிச்சயமான கதை மாந்தர்களும். அருணனின் சமூக விழிப்பு இக்கதைக்கு உயிரூட்டுகிறது. சராசரி நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் சினிமாக்கலை ஆசை பதிவாகியுள்ளது. சினிமாவினால் யார் யார் எதை எதை இழக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமலேயே அந்தப் பொய் முகத்தில் பதிந்து போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் நண்பனின் தவிப்பு மெய்யானது. அதை, அருணன் நாடகவெளி கொடுத்துக் காட்சிப்படுத்தியிருப்பது சிறுகதை சொல்லலில் ஒரு நல்ல நிறைவான அனுபவத்தைப் பெற்றுத் தந்துள்ளது. 
அருணனிடம் திருப்பிச் சொல்வதற்கு கேட்டு ரசித்த விஷயங்களும் பார்த்து உள்வாங்கிக் கொண்ட அனுபவப் படிவங்களும் குவிந்து கிடக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியச் செறிவும் இணைந்து உயர்வான படைப்புகளை அச்சிலேற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. படைப்பிலக்கியத் துறையில் ஞானபீடம் ஜெயகாந்தனையும் கவிஞர் சிற்பியையும் ஆதர்சமாகக் கொண்டுள்ள இளவல் அருணன் மேலும் எழுதிக் குவித்தல் என்பது சாத்தியமே. 
நல்ல தரமான வாசகனாகவும், புதுச்சேரி கபிலன் பதிப்பகத்துப் பொறுப்பாளனாகவும் அறிந்துள்ள அருணனை, கதாசிரியனாகவும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
மேலும் சிறப்பாக எழுத இளைஞர்கள் கல்வி மையம், தமிழ் மரபு மையம் சார்பில் ஆரோவில் சகோதர வட்டத்தினர் வாழ்த்துகளைப் பூக்கூடையில் அடுக்கி அனுப்புகிறார்கள்.
வாழ்க வளர்க!
அன்புடன்
இரா. மீனாட்சி
மாத்ரி மந்திர் நர்சரி,
ஆரோவில் - 605101


Read more: http://kapilanpathippagam.webnode.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/
Create your own website for free: http://www.webnode.com

ஞாயிறு, 4 மார்ச், 2012

KAPILAN PATHIPPAGAM: ஆரோவில் புத்தகக் கண்காட்சி

KAPILAN PATHIPPAGAM: ஆரோவில் புத்தகக் கண்காட்சி

vasal

KAPILAN PATHIPPAGAM: ஆரோவில் புத்தகக் கண்காட்சி

KAPILAN PATHIPPAGAM: ஆரோவில் புத்தகக் கண்காட்சி: மையம்

vasal http://www.bookfair1000.blogspot.in/

ஆரோவில் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரி :ஆரோவில் மாத்ரி மந்திர் இளைஞர்கள் கல்வி மையத்தில் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி துவங்கியது.
இசையம்பலம் பள்ளி மாணவர்கள், புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தனர். கவிஞர் மீனாட்சி தலைமை தாங்கினார். தமிழ் மரபு மைய நிர்வாகி பாபு, ஆசிரியர் ஆனந்தன், விஜய் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் தங்கப்பா, போப்பு, குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன், பேராசிரியர்கள் சேதுபதி, குறிஞ்சிவேந்தன், ஓவியர்கள் ராஜ்குமார், ஜானகி, பத்திரிகையாளர் பாண்டியன், நல்லாசிரியர் வீராசாமி, சீனுவாசன், கோபு, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும் 7ம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியில் பல்வேறு புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
கண்காட்சியை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். ஏற்பாடுகளை ஆரோவில் தமிழ் மரபு மையம், சென்னை புது உலகம், கபிலன் பதிப்பகம் இணைந்து செய்துள்ளன.

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு