பரமசிவம் முத்துசாமி
இரா.குறிஞ்சி வேந்தன்
மானுடம் முழுவதையும் தம் பாட்டுத்திறத்தாலே கூட்டிவைத்த பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம்’ என்று குறிப்பிட்டு, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்றும் அருளாணை இட்டார். அம்மகாகவியின் கனவு இன்றைக்குக் கண்முன்னே நனவாகி வருகின்றது.
வடவேங்கடம், தென்குமரி ஆகிய இடைப்பட்ட நானிலத்தில் தோன்றிய தமிழ் இன்று உலகத்தையே தன்வசப்படுத்தியிருக்கிறது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் செழித்தோங்கி உலகமுழுதாளுகின்றது.
எங்கெல்லாம் தமிழர்கள் கால்பதித்தார்களோ, அங்கெல்லாம் தமிழும் தன்தடம்பதித்துக் கிளைத்து வளர்ந்திருக்கிறது. திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்ட தமிழர்களின் தோள்தழுவிச் சென்றது தமிழ்மொழி. தமிழியம் பரவிய உலகநாடுகளுள் குறிப்பிடத்தக்கது மலாயாபூமி. தாய்மண்ணை நேசிக்கும் எந்த மக்களும் தமிழர்களை விரும்புவர், காரணம் தமிழர்கள் எந்த மண்ணையும் தன் தாய்மண்ணாகக் கொண்டு போற்றுவர் என்பதே.
வரலாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது போல, தமிழகத் தமிழ், இந்தியத்தமிழ், அயலகத்தமிழ் வரலாறு என்பதான வரிசையில் ‘மலேசியப் பேச்சுத்தமிழ் வரலாறு’ ஒரு புதிய தடம்.
தான் பெற்ற இன்பமாகிய தமிழ்மொழியின் மாண்பை எங்கே தன் சந்ததியினர் மறந்து விடுவாரோ என்று கவலை கொள்ளும் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் இந்நூல் அது நீக்கும் மருந்து. ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி ரப்பர்த் தோட்டங்களுக்குள் விளைந்த இத்தமிழை அழகுடை நூல் வடிவில் செதுக்கித் தந்திருக்கிறார்கள் பேராசியர்கள் முனைவர் பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகிய இருவரும். காலப்பெட்டகமாம் இந்நூலை வெளியிடுதற்கு இசைந்த அவர்களுக்கு நன்றி கூறி, பெருமையுடன் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.